அஜீத்தை, அவரது ரசிகர் பலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படைப்பு வேதாளம். சென்னையிலிருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜீத். கால் டாக்சியில் பயணிக்கும்போது டிரைவர் மயில்சாமியின் நட்பு கிடைக்க, அவர் உதவியுடன் கொல்கத்தாவில் தங்குகிறார்கள். கூடவே அஜீத்துக்கு கால் டாக்சி ட்ரைவர் வேலையும் கிடைக்கிறது. அஜீத் ஒரு முறை சவாரி போகும்போது வக்கீல் ஸ்ருதி ஹாஸன் பயணிக்கிறார்.
அஜீத்தின் வெகுளித்தனத்தைப் பார்த்த அவர், ஒரு வழக்கில் பொய் சாட்சியாக கூட்டிப் போகிறார். ஆனால் இவர் பொய் சாட்சி என்பது அம்பலமாகிவிட, ஸ்ருதி வக்கீல் தொழிலைப் பார்க்க முடியாத நிலை. இந்த நிலையில் லட்சுமி மேனனை லவ்வுகிறார் அஸ்வின். அஜீத் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒரு நாள் இரு கடத்தல்காரர்களை போட்டுத் தள்ளுகிறார் அஜீத். அதை ஸ்ருதி ஹாஸன் பார்த்துவிட, அந்த கட்டத்தில் அஜீத் தன்னைப் பற்றிச் சொல்கிறார்.
அப்போதுதான் லட்சுமி அவர் தங்கையே இல்லை எனத் தெரிகிறது. அஜீத் யார், அவர் ஏன் கொலை செய்கிறார்? லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன? என்பதை மசாலா மணத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. பரம சாது.. பயங்கர சண்டை பார்ட்டி என இரு வேறுபட்ட சுபாவங்களைக் காட்டும் பாட்ஷா டைப் படம் இது. அஜீத் எந்தக் குறையும் வைக்கவில்லை. சொல்லப் போனால் அவ்வப்போது தேங்கி நிற்கும் திரைக்கதைக்கு தோள் கொடுத்திருக்கிறது அவரது மாஸ் இமேஜ்.
நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்... போன்ற வசனங்களை அஜீத் பேசும் போதெல்லாம் காது கிழிகிறது அவரது ரசிகர்களின் கைத் தட்டல்களில். இந்த மாதிரி ஆக்ஷன் படங்களில் ஒரு கதாநாயகிக்கு என்ன வேடமோ அதுதான் ஸ்ருதி ஹாஸனுக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். ஆனால் தங்கையாக வரும் லட்சுமி மேனனுக்கு நல்ல வாய்ப்பு. இது போன்ற வேடங்களை ஊதித் தள்ளுபவர் லட்சுமி. அதுவும் அஜீத்துடன் வாய்ப்பு என்பதால் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ராகுல்தேவ், கபீர் சிங், அங்கித் சவுகான் ஆகியோர் வில்லன்கள். கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். சமயத்தில் இவர்கள் வில்லன்களா காமெடியன்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சூரி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சிரிக்க வைத்திருக்கலாம். எங்கோ உள்ள ஸ்ருதி ஹாஸன், அந்தக் கொலையை எப்படி துல்லியமாகப் பார்க்கிறார் என்று தெரியவில்லை.
அந்த ப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால் வேதாளத்தின் இரண்டாம் பாதி மிரட்டலாக இருந்திருக்கும். வெற்றியின் ஒளிப்பதிவில் இத்தாலியை ரசிக்க முடிகிறது. சென்னை, கொல்கத்தா காட்சிகளுக்கு அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் அருமை. அனிருத்தின் இசையில் ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடல்கள் அஜீத் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைக்கின்றன.......!
Tags:
Ajith Vedhalam like Rajini Baashha
,
Cinema
,
அஜித் வேதாளம்
,
சினிமா
,
பாட்ஷா மாதிரி