மன அழுத்தம் காரணமாக , சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்.
அவரது தற்கொலை சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சாய் பிரசாந்த் தற்கொலையை முன்னிறுத்தி சன் டி.வி உட்பட அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களையும் கடுமையாக சாடி இருக்கிறார் ராதிகா சரத்குமார்.
“சாய் இறந்த செய்தியைக் கேட்டதில் இருந்தே கோபமாக இருக்கிறேன். சின்னத்திரை என்பது சினிமா மாதிரி கிடையாது.
ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகை தன்னுடைய நாடகங்களில் நடிக்கிறார் என்றால், மற்ற தொலைக்காட்சியில் நடிக்கக் கூடாது, மற்ற சேனல் நடத்தும் ஷோவுக்கு போகக் கூடாது என்று கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய வேலை வாய்ப்பை பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகிறது.
இந்த மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்கள் கையெழுத்து வாங்கி கொள்வதால் நிறைய பேர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
சின்னத்திரை என்பது ரொம்ப சின்ன இடம் என்பதால் மிகவும் பொருளாதார சிக்கல் நடிகர், நடிகைகளுக்கு ஏற்படுகிறது.
நானே நிறைய இடங்களில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ மற்ற நிறுவனங்களின் சீரியல்களில் நடிக்கப் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என சொல்லியிருக்கிறேன். அதை தடுக்கக் கூடாது என்று நான் நிறைய தடவை சண்டையிட்டும் இருக்கிறேன். திறமையுள்ள நடிகன் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
சமுத்திரக்கனிதான் என்னுடைய ‘அரசி’ சீரியலில் சாயை அறிமுகப்படுத்தினார். என்னைப் பார்க்க நிறைய முறை அலுவலகத்திற்கு வருவான். தற்கொலை செய்தவற்கு முன் அவன் எழுதிய கடிதத்தில் எனக்கு நன்றி சொல்லியிருப்பதாக சொன்னார்கள்.
அதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு தொலைக்காட்சியின் சீரியலில் நடித்தால் மற்றொரு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிக்க நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்”
சாய் பிரசாந்தின் மரணமும், அது தொடர்பான ராதிகா சரத்குமார் சொல்லும் உண்மையும் சேனல்களின் சிறையிலிருந்து சின்னத்திரை கலைஞர்களை விடுவிக்குமா?
Tags:
Cinema
,
சன் டி.வி
,
சாய் பிரசாந்த்
,
சினிமா
,
சின்னத்திரை
,
ராதிகா