ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரம் பயின்று, சினிமாவின் மீதான காதலால் சென்னைக்கு படையெடுத்து, இன்று தமிழகத்தை பசுமை நாடாக மாற்றுவேன், மாற்று அரசியல் புரட்சிக்கு வித்துடுவேன் என்று மக்கள் நலனுக்காக பாடுப்பட வந்திருக்கும் மற்றுமொரு தமிழக அரசியல் தலைவராக வளர்ந்து நிற்கிறார் சீமான்.
இவரது பேச்சில் வேகமும், சீற்றமும் மிகவும் அதிகம். தமிழ் மொழி மீதும், தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீதும் தீராத காதல் கொண்டிருப்பவர் சீமான்.
நடிப்பு, இயக்கம், வசனகர்த்தா, சமூக ஆர்வலர், அரசியல் என பல முகங்கள் கொண்டிருப்பவர் சீமான். இனி, இவரை பற்றி பலரும் அறியாத வாழ்க்கை தகவல்கள் பற்றி காணலாம்..
1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி சிவகங்கை மாவட்டத்தில் அமைத்துள்ள இளையான்குடி வட்டத்தில் இருக்கும் அறினையூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் சீமான்.
இவர் ஓர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செந்தமிழன், தாய் அன்னம்மாள் ஆவர்கள். சீமான் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழியை திருமணம் செய்துக் கொண்டார். தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் உலக தமிழர் பேரவை தலைவர் திரு. பழ நெடுமாறன் தமையில் YMCA திடலில் நடைபெற்றது.
இளம் வயதிலேயே சினிமாவின் மீது பெரும் ஆவல் கொண்டிருந்தார் சீமான். கல்லூரி படிப்பு முடித்த பிறகு இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை சென்றார்.
இவர் இயக்குனர்கள் மணிவண்ணன் மற்றும் பாரதிராஜா போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். சில திரைப்படங்களில் இவர் வசனகர்த்தாவாகவும் இருந்துள்ளார்.
இவர் இயக்கிய முதல் படம் பாஞ்சாலங்குறிச்சி. குறிப்பிடும் அளவிற்கு வெற்றிபெற்ற திரைப்படமாக சீமானுக்கு இப்படம் அமைந்தது. ஆனால், அடுத்த படமான இனியவளே, வீரநடை படங்கள் தோல்வியை தழுவின.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘தம்பி’ திரைப்படம் மூலமாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால், மீண்டும் இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய வாழ்த்துக்கள் தோல்விப் படமாக அமைந்தது.
இதற்கிடையில் நடிகர் அவதாரமும் எடுத்தார் சீமான். அமைதிப்படை, பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டிக் குடும்பத்தார், மகிழ்ச்சி, நாகராஜா சோழன் MA, MLA போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
இலங்கையில் ஏற்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையின் போது சமூக போராளியாக களமிறங்கினர் சீமான். இவரது தமிழ் பற்றும், தமிழர் கலாச்சாரம், பண்பாடுகள் மீது கொண்டிருந்த ஆர்வமும் இவரை விடுதலை புலிகள் ஆதரவாளராக வெளிக்கொண்டு வந்தது.
இதன் பால், இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் நேரில் போய் சந்தித்து, பல செயல்பாடுகள் குறித்து விவாதித்து வந்தார்.
ஈழத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் மனித விரோத செயல்களை கண்டு, அதை பற்றி தமிழ் நாட்டில் மக்களுக்கு செய்திகள் சென்றடைய வேண்டும் என அங்கு நடந்தவை பற்றி மேடைகளிலும், மக்கள் மத்தியிலும் பேச துவங்கினார்.
இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசியதின் காரணத்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். பிறகு விடுதலையும் ஆனார்.
நாம் தமிழர் இயக்கத்தின் மூலம் பல மக்கள் நல்வாழ்விற்கான போராட்டங்களை நடத்தினார். மே10, 2010 அன்று தன் நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார் சீமான்.
தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன் முருகன் பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடக அரசுகளை கண்டித்தும், இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
வசனம், இயக்கம், சமூக பணிகள், அரசியல் என்று மட்டுமின்றி, புத்தகங்களும் எழுதியுள்ளார் சீமான். வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010), திருப்பி அடிப்பேன் போன்ற இரண்டு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.
‘இது மற்றொரு அரசியல் கட்சி அல்ல,மாற்று அரசியல் புரட்சி ……..
நமது வாக்கு..நம்மை ஆளவா…
நமது வாக்கு..நாமே ஆளவா…’
என்ற முழக்கத்தை முன்னிறுத்தி வரவிருக்கும் தமிழக சட்டசபையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது சீமான்-ன் நாம் தமிழர் கட்சி.
Tags:
Cinema
,
எவனோ ஒருவன்
,
சினிமா
,
சீமான்
,
பள்ளிக்கூடம்
,
பொறி