‘வேலாயுதம், உத்தமபுத்திரன், சந்தோஷ்சுப்ரமணியம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ஜெனிலியா. இவரும், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் 2012-ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா படங்களில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு புதிய படங்களில் நடிக்க தயாராகிறார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், விளம்பர படம் ஒன்றில் நடிக்க ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. ஜெனிலியாவும் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் இதில் பங்கேற்று நடித்து வந்தனர்.
பாங்காக்கில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நடந்து 27 பேர் உயிர் இழந்த இந்து கோவில் அருகிலேயே இதன் படப்பிடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பில் ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து ஜெனிலியா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
பாங்காக்கில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் பக்கத்தில்தான் நான் நடித்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடந்தது. குண்டுவெடிப்பு சத்தம் எனக்கு பயங்கரமாக கேட்டது. இதில் பலர் இறந்து போனது கவலை அளித்தது. நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா