தலைவன் என்பதன் சுருக்கம்தான் தல என்பது. தன்னை தன்னுடைய ரசிகர்கள் இப்படி அழைப்பது அஜித்துக்குப் பிடித்தமான விஷயமாக இருந்தால், இந்த நாடே அஞ்சலி செலுத்திய அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்திருக்க மாட்டார்.
சில நடிகர்களாவது பரீட்சைத் தேர்வுக்கு பதில் எழுதுவதைப் போல் 140 எழுத்துக்களுக்கு மிகாமல் டிவிட்டரிலாவது அஞ்சலி செலுத்தினார்கள். ரஜினிகாந்த் போன்றவர்கள் 420 வரிகளுக்கு மிகாமல் டிவிட்டரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
கமல்ஹாசன் ஒரு கவிதையே பாடிவிட்டார். விஜய், அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு இரங்கல் செய்தி அனுப்புகிறார். ஆனால், இவர்கள் யாருமே நேரிடையாக சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக வளர்ந்த சிவகார்த்திகேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். நகைச்சுவை நடிகர் தாமு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
அரசியலில் பலமாகக் கிண்டல் செய்யப்பட்ட விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.ஆனால், அஜித்துக்கு 140 எழுத்துக்கள் வேண்டாம், ஒரு 14 எழுத்துக்களில் கூடவா அஞ்சலி செய்தி ஒன்றை வெளியிட முடியாது. அஜித் போன்றவர்களின் பின்னால் பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் அப்துல் கலாம் பற்றிய எண்ணங்களை விதைத்திருக்கலாமே.
ஆட்டோ ஓட்டுபவர்களில் இருந்து ஹோட்டல் வைத்திருப்பவர்கள் வரை தங்களால் முடித்த அளவிற்கு போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏன், இரண்டு வயது குழந்தைகள் கூட அப்துல் கலாம் படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தும் புகைப்படங்கள் பலருக்கு கண்ணீரை வரவழைத்தன.சினிமாவில் எது நடந்தாலும் தான் கண்டு கொள்ள மாட்டீர்கள், நாட்டில் எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டீர்களா அஜித்.
இது நாங்கள் கேட்கவில்லை, கொஞ்சம் சமூக வலைத்தளங்கள் பக்கம் சென்று பாருங்கள், மக்களின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது என்று உங்களுக்குப் புரியும்.