சில ஆண்டுகளுக்கு முன் சேட்டை என்று ஒரு படம் வந்தது. அதில் சந்தானத்துக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் போட, அது பற்றி சந்தானத்திடமே ரஜினி ஜாலியாக விசாரித்திருக்கிறார். இதனை சந்தானமே நேற்று தெரிவித்தார். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.
இப்படத்தின் இசை வெளியீடு புதன்கிழமை மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் சந்தானம் பேசுகையில், “கல்லூரியின் கதை படத்தில் ஆர்யா என்னுடன் நடிக்கும் போது, நானும் அவரும் கொஞ்சம் நட்பா இருப்போம். அப்போ பெங்களூரிலிருந்து மாடல்ஸ் வந்திருந்தாங்க.
அப்போ நீங்க யாருனு கேட்கவும் நான் தான் காமெடி சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டேன். இதை ஆர்யா கவனிச்சு எல்லோரிடமும் போட்டுக் கொடுத்துவிட்டார். அப்போ இருந்தே இன்னும் அதிக நட்பா பழக ஆரம்பித்துவிட்டோம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பழைய சம்பவத்தை நினைவில் வைத்து, டைட்டிலில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்றே டைட்டிலில் பெயரை போட்டுவிட்டார். அந்த அளவுக்கு எனக்கும் ஆர்யாவுக்கும் நட்பிருக்கிறது.
நான் லிங்கா படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போது, சூப்பர் ஸ்டார் பட்டத்தை இப்போ யார்யாரோ போட்டுக்குறாங்க என்று பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி என்னைப் பார்த்து ‘நீங்க கூட காமெடி சூப்பர் ஸ்டார்னு போட்டீங்களாமே’ அப்டினு கேட்கவும் ஷாக் ஆயிட்டேன். உடனே சார் அது ஆர்யா டைட்டிலில் போட்டுட்டாரு என்றேன். தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துலதான் ஹீரோவுக்கு இணையா காமெடியன் போட்டோவும் விளம்பரத்தில் போட்டார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு ஆர்யாவும் ஓகே சொன்னாரு.
அந்த நிகழ்வுதான் நான் ஹீரோவா நடிக்கிறதுக்கு காரணமாகவும் தூண்டுதலாகவும் இருந்தது. அவர் என்னை பயன்படுத்திக் கொள்வதும், நான் அவரை பயன்படுத்திக் கொள்வதையும் தாண்டி எங்களுக்குள் ஆத்மார்த்தமான நட்பிருக்கிறது. அதுமட்டும் தான் எங்களின் வளர்ச்சிக்கும் காரணம்.
ஆர்யா இந்தப் படத்தோட ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இது வரைக்கும் படத்துக்காக செலவு தான் பண்ணிட்டு இருக்காரு. ஆனா வரவு வரவில்லை. அதனால இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள். நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும். சீக்கிரம் வந்துவிடுகிறோம்,” என்றார்.
Tags:
Cinema
,
சினிமா