நேற்று உலக மாமியார்கள் தினம். ஒரு பெண்ணுக்கு மாமியார் இரண்டாவது அம்மா எனச் சொல்வார்கள். மாமியார் மருமகள் இடையிலான அன்பு, பாசம், சண்டை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வடிவில் இருக்கும். அன்றாடம் நம்மை ரசிக்க வைக்கும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் மாமியார்-மருமகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.
சீரியலில் வில்லி...உறவில் கில்லி!
நான் சீரியலில் மட்டும் தான் புலி ஆனா நிஜ வாழ்க்கையில் பூனை என பவ்யமாகச் சொல்லும் தெய்வமகள் காயத்ரியாக மிரட்டும் ரேகா தன்னுடைய மாமியாரைப் பற்றி நெகிழ்கிறார்.
என் முதல் ரசிகையும்...சொந்த அம்மாவை போன்றவர் என் மாமியார். நான் நடிக்கிற சீரியல்களின் எல்லா எபிசோடையும் பார்த்துட்டு உடனே போன் பண்ணி ஃபீட்பேக் கொடுத்துடுவாங்க. உன் நிஜ கேரக்டருக்கும் நடிக்கிற கேரக்டருக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லையேம்மா...எப்படிம்மான்னு ஆச்சர்யக்குறி வெப்பாங்க.
இப்படி என்னோட நடிப்பைப் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுவாங்க. ஆனா, அதுல மாமியாரோட பாராட்டுதான் தி பெஸ்ட். தொழில்னு வந்ததுக்குப் பிறகா, டைரக்டர் சொல்றதை கேட்டு அப்படியே நடிக்கிறதுதானே நம்ம வேலைன்னு சொல்லி சிரிச்சுட்டுப் போயிடுவேன். என் மாமியார் கூட நான் ரொம்ப க்ளோஸ்.
சீரியல்ல மாமியார் உள்பட நிறைய குடும்ப நபர்களை கொடுமைப்படுத்துற மாதிரி நடிக்கிறேன். அது வெறும் சீரியலா மட்டும்தான் இருக்கணும். நிஜ வாழ்க்கையில தப்பித்தவறிக்கூட அப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு அடிக்கடி கடவுளை வேண்டிக்குவேன். குறிப்பா நான் எடுக்குற பெரும்பாலான முடிவுகள், என் அத்தையோட அட்வைச் படித்தான் இருக்கும்.
பண்டிகை, பிறந்த நாள் எந்த சிறப்பு நாளாக இருந்தாலும் உடனே சஸ்பென்ஸா ஒரு கிஃப்டைத் தூக்கிட்டுப்போ அத்தையை சந்தோஷப்படுத்திடுவேன். எனக்கு கடவுள் கொடுத்த பெஸ்ட் கிப்ட் என் மாமியார், என் குடும்பமும் தான். இவங்க எல்லோரும் என் கூட இருக்கிற வரை எப்பவும் எனக்கு சக்ஸஸ் தான்.
மிஸ் யூ மை மாமியார்
எனக்கு கல்யாணமாகி எட்டு வருஷமாகுது. மாமியாரோட 14 வயசுலயே அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. அப்போ அவங்க ரொம்பவே சின்னப் பொண்ணா பார்க்க பாப்பா மாதிரி இருந்ததால அவங்கள எல்லோரும் பாப்பம்மாள்னு கூப்பிட ஆரம்பிச்சு அதே அவங்க பெயரா மாறிடுச்சு என கலகலப்பாக பேசுகிறார் தேவதை சீரியலில் நடிக்கும் மெளனிகா.
கல்யாணமாகி கணவர் வீட்டுல செட்டில் ஆகுற நேரத்துல மாமியார் கொடுமை இருக்கும்ங்கிற பயம் ரொம்பவே அதிகமா இருந்துச்சு. அவங்ககிட்ட பேசவே தயங்குவேன். சுத்தமா சமைக்கவும் வீட்டுவேலைகள் செய்யவும் தெரியாது. அப்போ அவங்க ஒரு அம்மா மாதிரி எங்கிட்ட பழகி, எல்லா வேலைகளையும் செய்யக் கத்துக்கொடுத்தாங்க.
ஒருமுறை இரவு நேரத்துல அடுப்பில் சாதம் வெச்சுட்டு என்னைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அவங்க கடைக்குப் போயிட்டாங்க. அப்போ திடீர்னு பவர்கட் ஆக நான் பயந்துப்போய் வெளியிலபோய் உட்கார்ந்துகிட்டேன். திரும்பி அவங்க வந்து பார்க்க அடுப்படியே நாரிப்போய் கிடந்துச்சு. ஏம்மா அடுப்பை ஆஃப் பண்ணிட்டுப்போய் வெளியில உட்கார்ந்து இருக்க வேண்டியதுதானே. எதாச்சும் ஆயிருந்தா...ன்னுதான் சொன்னாங்க.
என்னோட அம்மாக்கூட இப்போ வரைக்கும் பல விஷயங்களுக்கு என்னைத் திட்டுவாங்க. ஆனா என்னோட மாமியார் எதுக்குமே பெரும்பாலும் திட்டமாட்டாங்க. அவங்கள அப்பப்போ வெளியில அவுட்டிங் கூட்டிட்டுப்போனா போதும். எந்த ஒரு விஷயத்தையும் ஈசியா கன்வீனியன்ஸ் செய்திடலாம். எனக்கு மாத்திரை சாப்பிடுவதுன்னா ரொம்ப கஷ்டம். எதாச்சும் எனக்கு உடம்பு சரியில்லைன்னா, என்னை மாத்திரை சாப்பிட வைத்து உடனே வாயில கொஞ்சம் சர்க்கரைப் போடுவாங்க.
என்னோட கணவரும் நானும் அடிக்கடி அவுட்டிங் போகிறோமோ இல்லையோ, அத்தையும் நானும் அடிக்கடி கோயில், பார்க்குன்னு சுத்திட்டே இருப்போம். சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க. வாராவாரம் வெள்ளிக்கிழமை சாமி கும்பிட்டுட்டு அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன்.
கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மாரடைப்பால அவங்க இறந்துட்டாங்க. எல்லோர்கிட்டயும் அவங்கள என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னுதான் சொல்லுவேன். 'ஐ எம் வெரி மிஸ் யூ மை ஃப்ரெண்ட் பாப்பம்மாள்' என கண்கலங்குகிறார், மெளனிகா.
என் மாமியாரை நேரில் பார்ததே இல்லை!
தெய்வமகள் சீரியலில் திலகவதி கேரக்டரில் நடிக்கும் சிந்து ஷ்யாம் கணேஷ் தன் மாமியாருடம் பழகும் வாய்ப்பு கிடைக்காததைப் பற்றி வருத்தத்துடன் பேசுகிறார். என்னுடைய மாமியார் பெயர் சியாமளா. எனக்கு கல்யாணம் ஆவதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பாகவே அவங்க இறந்துட்டாங்க. அவங்கள நான் நேர்ல பார்த்ததே இல்லை. குறிப்பா அவங்க பயன்படுத்தின புடவைகள், நகைகளை பலவும் என் திருமணத்துக்குப் பிறகா என் கணவர் எனக்குக் கொடுத்தாரு. இப்போ பண்டிகை நாட்கள்லயும், மற்ற பல நாட்கள்லயும் அவற்றைப் பயன்படுத்துவேன். எங்க ரெண்டு பேரோட ஜென்ம நட்ஷத்திரமும் திருவோணம்தான்.
ரொம்பவே அமைதியானவங்க, யார் மனசையும் புண்படுத்தாம பழகுறவங்க, நல்லா சமைக்கிறவங்க, என் மேல ரொம்பவே பாசமா இருப்பாங்க. இப்படியெல்லாம் எனக்கு திருமணமான சமயத்துல இருந்து இப்போவரைக்கும் தினமுமே மாமியாரைப்பத்தி கணவர் ஷ்யாம் கணேஷ் சொல்லிட்டே இருப்பாரு. அதையெல்லாம் கேட்கிறப்போ அவங்ககூட நேர்ல பழகுற வாய்ப்புக் கிடைக்கலையேன்னு நிறையவே வருத்தப்படுவேன். அதையெல்லாம் விட எங்க குழந்தைகளுக்கு பெரியவங்களான அத்தையோட பாசம், அரவணைப்பு, நல்ல கருத்துக்களை சொல்லி வளர்க்குறது இதெல்லாம் கிடைக்காம போச்சேன்னுதான் அதிக அளவுல வருத்தப்படுவேன்.
Tags:
Cinema
,
அன்பு
,
காயத்ரி
,
சிந்து
,
சினிமா
,
பாசம்
,
மருமகள்
,
மாமியார்
,
மெளனிகா
,
ரேகா