தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நடிகை ரோஜா கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, தன் கட்சி தொண்டர்களுடன் நேற்று நகரி நகராட்சி அலுவலகம் முன் ஊர்வலம் மற்றும் வீதி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சித்தூர் பொலிஸார் நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இதை தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக ரோஜா, திருப்பதியில் இருந்து தனது கட்சி எம்.எல்.ஏ.க்களான பாஸ்கர் ரெட்டி, ராமசந்திரா ரெட்டி, ஈஸ்வரி, திப்பாரெட்டி ஆகியோருடன் நகரிக்கு புறப்பட்டு வந்துள்ளார். இதனை அறிந்த பொலிஸார், ரோஜா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்ற கார்களை துரத்தியபடி சென்றுள்ளனர்.
சினிமா காட்சிகளைப் போல இந்த துரத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் திடீரென ரோஜாவின் கார்கள் நகரிக்கு செல்லாமல் பள்ளிப்பட்டுக்கு திரும்பியுள்ளன.
மாலை 4 மணியளவில் நடிகை ரோஜாவின் கார், நகரி ரோட்டில் செல்லாமல் சோளிங்கர் ரோட்டில் சென்றது. அப்போது பொலிஸார், ரோஜாவின் காரை சோளிங்கர் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகே மடக்கினர். அப்போது பொலிஸார் வந்த வாகனம் மோதியதில், எம்.எல்.ஏ.பாஸ்கர் ரெட்டி காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் ரோஜா, ஆந்திர பொலிஸார் தன் மீது காரை ஏற்றி கொல்ல வந்ததாக தெரிவித்தார். எம்.எல்.ஏ. பாஸ்கர் ரெட்டி, பொலிஸார் தன் மீது காரை ஏற்றியதில் காயம் அடைந்ததாக புகார் தெரிவித்தார்.
அப்போது பொலிஸ் நிலையத்தில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் பொலிஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து, நடிகை ரோஜா, எம்.எல்.ஏ. தனது தொண்டர்களுடன் காரில் புறப்பட்டு நகரி சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் சத்திரவாடா என்ற இடத்தில் காத்திருந்த பொலிஸார் ரோஜாவை கைது செய்து புத்தூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Tags:
Actress Roja Arrested
,
Cinema
,
சினிமா
,
நடிகை ரோஜா கைது