கடும் காய்ச்சலால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் உடலைப் பார்த்து கதறி அழுதனர் நடிகர் விஷாலும் பிரபு தேவாவும். திரையுலகினர் பலரும் விவேக்குக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
நடிகர் விவேக் மகன் காய்ச்சலால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 13. சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த பிரசன்ன குமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், காய்ச்சல் குணமாகவில்லை.இதற்காக சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேக்கும், மனைவி அருள்செல்வியும் அருகில் இருந்து மகனை பார்த்துக்கொண்டனர்.இந்த நிலையில், நேற்று பிரசன்ன குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் பலன் இல்லாமல், மரணம் அடைந்தார்.பிரசன்ன குமாரின் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள விவேக்கின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமாரின் மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல், திரையுலகினரையும் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் விவேக் வீட்டு முன்பு திரண்டு நின்றார்கள்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் பிரசன்னகுமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் விவேக்கைப் பார்த்ததும் கதறி அழுதார். அதேபோல பிரபுதேவா துயரத்தில் அழுதார். இதே போல தன் மகனைப் பறி கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், உதயநிதி ஸ்டாலின், சந்தானம், தாமு, கரண், உதயா, சிங்கம் புலி, சிங்கமுத்து, சூரி, மனோபாலா, நடிகைகள் விந்தியா, சரண்யா, லலிதகுமாரி, கும்தாஜ், இயக்குநர்கள் கரு பழனியப்பன், எஸ்பி ஜனநாதன், ஹரி, தங்கர்பச்சான், டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரசன்னகுமார் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது
Tags:
சினிமா
,
பிரபுதேவா
,
விவேக் மகன் உடலைப் பார்த்து கதறிய விஷால்