சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13-ந்தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும் போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.
பகுத்தறிவு என்றால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோது யாரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஆனாலும், மதம், சாதி, இனம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை.
கடவுள் இருக்கிறாரா? என்று எனக்கு தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார்? பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். எனக்கு 6-வது அறிவை கடவுள் தரவில்லை. எனது பெற்றோர் தந்தனர். அவர்களை நான் கடவுளாக நினைக்கிறேன்.
பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுப்பட்டார் பெரியார். எனவே பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்.
பெரியாருக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து, வளர்ந்தாலும், என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளது.
படிப்பு இல்லாதவர்களிடம் தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று ஆசிரியர்(கி.வீரமணி) இங்கே சொன்னார். நானும் படிக்காதவள் தான். அதனால் தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது. இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்கு பயந்து துணிச்சலை வெளிகாட்டுவது இல்லை.
நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில், ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ என்ற தலைப்பில் பெண் வக்கீல் அருள்மொழியும், ‘‘புத்துலகின் தொலைநோக்காளர்’’ என்ற தலைப்பில் பேராசிரியை சுந்தரவல்லியும், ‘‘பழமை, மூடநம்பிக்கைகளின் எதிரி’’ என்ற தலைப்பில் கவிஞர் சல்மாவும், ‘‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் பேசினர்.
நிகழ்ச்சியின் முடிவில் குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம்,‘‘ நடிகர் சங்க தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இல்லத்தரசியாக, திரைப்பட தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக எனக்கு பல பொறுப்புகளும், வேலைகளும் அதிகம் உள்ளது. எனவே நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை.’ என்றார்.
Tags:
Cinema
,
குஷ்பு
,
குஷ்பு பேச்சு
,
சினிமா